1526. நான் மர்யமின் மைந்தருக்கு மிகவும் நெருக்கமானவன் ஆவேன் – இறைத் தூதர்கள் தந்தை வழிச் சகோதரர்கள் ஆவர் – எனக்கும் அவருக்கும் இடையே இறைத்தூதர் எவருமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1527. ‘ஆதமின் மக்களில் (புதிதாகப்) பிறக்கும் குழந்தை எதுவாயினும் அது பிறக்கும் போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தானின் தீண்டலால் அக்குழந்தை கூக்குரலெழுப்பும். மர்யமையும் அவரின் மகனையும் தவிர’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூஹுரைரா (ரலி) அறிவித்துவிட்டு பிறகு, ‘நான் இக்குழந்தைக்காகவும் வருங்கால வழித்தோன்றலுக்காகவும் சபிக்கப்பட்ட ஷைத்தானை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்னும் (மர்யமுடைய தாய் செய்த பிரார்த்தனையை கூறும் – என்ற 3:36-வது) இறைவசனத்தை ஓதுவார்கள்.
1528. மர்யமின் மகன் ஈஸா (அலை) அவர்கள், ஒருவர் திருடிக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவனிடம், ‘நீ திருடினாயா” என்று கேட்டார்கள். அதற்கு அவன், ‘இல்லை எவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லையோ அவன் மீதாணையாக!” என்று பதிலளித்தான். உடனே ஈஸா (அலை) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீது நான் நம்பிக்கை கொண்டு, என் கண்ணை நம்ப மறுத்தேன்” என்று கூறினார்கள்.
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library