Featured Posts

“அபேக்ஷா” வாட்டு இலக்கம் 18 (தொடர் 01) – சந்தோசத்திற்கு மத்தியில் ஒரு சோதனை

கஃபாவை தரிசிப்பது ஒவ்வொரு முஸ்லிமினதும் மிகவும் உயர்ந்த ஆசைகளில் ஒன்று தான். அந்த ஆசைதான் என் கணவருக்கும் பல வருடங்களாக இருந்து வந்தது. அவர் உம்ராப் பயணம் சென்று வர மிகவும் முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போதுதான் அவரது சகோதரியுடன் ரியாத் போக வேண்டிய தேவை அவருக்கு ஏற்பட்டது. நாம் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த சிலதொகைப் பணம் மூலம் பல சிரமங்களுக்கு மத்தியில் அல்லாஹ்வின் வீட்டைத் தரிசிக்கச் செல்லும் கனவு நனவாகியது. அல்ஹம்துலில்லாஹ்.

2025 ஜனவரி 14 ஆம் திகதி வீட்டிலிருந்து ரியாத்துக்குப் புறப்படுகின்றார். அவர் பயணம் மேற்கொள்ளும் காலகட்டத்திலே என்னுள் அதிகமான பதட்டமும், உடல் சோர்வும், சிறுசிறு வருத்தங்களும் இருந்துகொண்டே இருந்தன. அவர் போகும்போது நான் எதனையுமே அவரிடம் காட்டிக்கொள்ளவில்லை. என்னால் அவர் வரும் வரை பிள்ளைகளுடன் அனைத்தையும் சமாளித்துக் கொண்டு இருக்க முடியுமா? பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்ப வேண்டும். வீட்டிற்குத் தேவையான அனைத்தையும் வாங்கிவைத்தாலும் வரும் வரையில் வீட்டின் அனைத்தும் எனக்கே பொருப்பு. இதனால்தான் நான் அப்படி இருக்கின்றேன் என்று என்னை நானே சமாளித்துக் கொள்கின்றேன்.

திருமணம் முடிந்து பத்து வருடங்களாகினாலும் அனைத்து விடயங்களினதும் பொருப்பை அவரே கவனித்துக் கொள்வதால் எனக்கு எந்தவொரு சிரமமும் இருக்கவில்லை. அவர் வீட்டில் இல்லாத போதுதான் அவரின் பெறுமதியை நான் இன்னுமின்னும் உணர்ந்து கொண்டேன் அல்ஹம்துலில்லாஹ்.

அவர் என்னை விட்டுப் பல மைல் தூரம் சென்றதால் தான் கவலையின் காரணமாக நான் என் உடம்பில் அதிக சோர்வை உணர்கிறேன். என்னால் ஒழுங்காக சாப்பிட முடியவில்லை, தூக்கம் வரவில்லை, மணதில் அதிகமான பதட்டம். என்று நானும் என்னைச் சூழ இருந்தவர்களும் நினைத்தோம். என் குடும்பம் என்னுடன் இருக்கின்றார்கள். சகோதரர்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டனர். பெரிதாக கஷ்டங்கள் இருக்கவில்லை. ஆனாலும் எனக்குள் ஏதோ மாற்றங்கள் நிகழ்வதை உணர்கின்றேன். அவர் உம்ரா போவதற்கு முன்னருமே இப்படித்தான் இருந்தது. அவரது உம்ராப் பயணம் என்னால் தடைப்படக் கூடாது என்று அவரிடம் எதுவுமே கூறமுடியாமல் தவித்தேன். அவர் சஊதி அரேபியாவில் 20 நாட்கள் தங்கினார். அடிக்கடி அவருடைய மேஸேஜ்கள், உம்ரா சம்பந்தப்பட்ட போட்டோக்கள் என்பவற்றையும் அனுப்பிக்கொண்டே இருந்தார். என்னால் அவற்றைப் பார்த்தாலும் சந்தோசத்தை உணர முடியவில்லை, பேசும் போது ஒழுங்காக பதிலலிக்க முடியவில்லை. நீங்கள் வீடு வரும் போது நான் வீட்டில் இருக்க மாட்டேனோ தெரியாது என்று பல முறை கூறி விட்டேன். அவர் சிரித்துக் கொண்டு நக்கலடிப்பார். ஆனால் ஏன் அவ்வாறு கூறுகிறேன் என்பதை நானும் புரியவில்லை. அவரும் பெரிதாக எடுக்கவுமில்லை.

வீட்டில் சாப்பாட்டுக்கு எந்தக் குறையுமிருக்கவில்லை அல்ஹம்துலில்லாஹ். அடிக்கடி விருந்தாளிகள். அவர் இல்லாததால் சகோதரர்கள் பலவிதமான சாப்பாடுகள், பழங்கள் என எனக்கும் பிள்ளைகளுக்கும் கொண்டு வந்து தருகின்றார்கள், தம்பியின் மனைவி என்னுடன் இருந்து அனைத்து வீட்டு வேலைகளையும் செய்து தந்தார். நான் ஓய்வாக இருந்தாலும் சாப்பிடக்கூட முடியவில்லை. இரவில் ஒழுங்காகத் தூக்கம் இல்லை. மணச்சோர்வு, உடல் சோர்வு இரண்டும் ஒன்றாக இணைந்து எனக்கு மரணத்தையே நினைவு படுத்திக்கொண்டிருந்தது.

இருபது நாட்களின் பின்னர் கணவர் வீடு வந்து சேர்ந்தார். ஆனாலும் என் பதட்டம் சோர்வு எதுவுமே குறைந்து விடவில்லை. வீட்டிற்கு எல்லோருமே வருகின்றனர். என்னால் விருப்பத்துடன் எந்தவொரு வேலையையும் செய்ய முடிவதில்லை. றமழான் மாத நோன்பும் எம்மை நெருங்கிக் கொண்டிருந்தது. நோன்பிற்கு இன்னும் சில நாட்களே இருந்ததால் ஆன்லைன் மத்ரஸாவின் வேலைகள் நடை பெற்றுக் கொண்டிருந்தன. றமழானில் மத்ரஸா மாணவர்கள் அவர்களாகவே அதிகமாக குர்ஆனை ஒதிக் கொள்ளட்டும் என்று விடுமுறை கொடுக்கத் திட்டமிட்டோம். 20ஆம் நோன்பில் அல்குர்ஆன் மனனம் செய்து முடித்த மாணவ மாணவிகளுக்குச் சான்றிதல்கள் வழங்க அதன் வேலைகளும் முடிந்திருந்தன.

இந்த றமழானில் நேரடியாகச் சென்று தஜ்வீத் வகுப்புகளை நடாத்த சில இடங்களில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனவே மிகவும் பிஸியாக இருப்போம் என்பதால் வேலைகளை இலகுபடுத்த வேண்டியிருந்தது. எங்கள் வீட்டில் ப்ரிட்ஜ் இல்லை என்பதால் றமழானில் ப்ரிட்ஜ் வாங்குவதற்காக வட்டியில்லாத இடத்தில் மாதாமாதம் பணம் செலுத்திப் பெற்றுக்கொள்ள விலைகளைப் பேசித் தீர்மானித்தோம். எப்போதுமே றமழானில் இருவருமே அதிகமாக பிஸியாக இருப்பதால் பெருநாளைக்குறிய ஆடைகளை கடைசி ஒரிரு நாட்களில் தான் வாங்குவோம். ஏனென்றால் கணவர் வழமையாக றமழான் காலத்தில்தான் இரண்டு மூன்று தடவை அல்குர்ஆனை முராஜஆ செய்வார். அதனால் நேரமே கிடைக்காது. எனவே உம்ரா சென்று விட்டு வந்தால் கேட்கவா வேண்டும். இன்னும் பக்தி அதிகரித்திருக்குமே என்று பிள்ளைகளுக்கான பெருநாள் உடுப்புகளை அவர் உம்ராவிலிருந்து வரும் முன்னரே வாங்கி வைத்து விட்டேன். றமழான் கேள்வி பதில் நிகழ்ச்சி இருப்பதாக என்னுடைய சாச்சா இஸ்மாயில் (ஸலபி) அவர்களின் அறிவித்தலைக் கேட்டவுடன் இந்தமுறை கேள்விக்கு பதிலளித்து உம்ரா பாக்கியத்தை நானே பெற்றுக்கொள்ள வேண்டும் என்பற்காக அந்நேரத்தின் வேலைகளையும் இல்லாமலாக்கி றமழானுக்குத் தேவையானதைப் பார்த்துப் பார்த்துத் திட்டமிட்டிருந்தேன். ஆனாலும் என்னில் இருந்த பதட்டமும், சோர்வும் அதிகரித்துக்கொண்டே சென்றது. எல்லாம் என்னிடம் இருந்தது. ஆனால் எந்தவித சந்தோசமோ நிம்மதியோ என்னில் ஏற்படவில்லை.

றமழானுக்கு இன்னும் ஒரு கிழமைதான் இருக்கின்றது. பிள்ளைகள் தொழப் போவதற்கான ஜுப்பா, மகளின் சிறிய ஹபாயா ஸ்கார்ப் எல்லாமே அழகாக எடுத்து வைக்கப்பட்டது. எல்லா வேலைகளும் சரியாக நடந்து கொண்டிந்தாலும் நான் மரணித்து விடுவேன். என்னால் இதன் பிறகு வாழ முடியாது என்பதை என் மணம் கூறிக்கொண்டே இருந்தது. எனக்கு ஏதோ பெரிய ஆபத்து நடக்கப் போகிறது என்பதை என்னுடைய றப் எனக்கு உணர்த்திக் கொண்டே இருந்தான்.

நான் பல நண்பர்களுக்கு கோல் செய்து எனக்கு ஏதோ வித்தியாசமாக இருக்கின்றது மரணிக்கப் போகின்றேனோ? என்றுகூறி அழுகின்றேன். வித்தியாசமான வருத்தம் பயம், சோர்வு என்று என் குடும்பத்தில் சிலரிடமும் கூறுகின்றேன். நான் பேசுவதை யாருமே பெரிதாக எடுப்பதில்லை ஏனென்றால் நான் பார்ப்பதற்கு நன்றாக இருக்கின்றேன். மத்ரஸா செய்துகொண்டிருக்கின்றேன். வீட்டு வேலைகளை நானே செய்கின்றேன். அதனால் நான் சும்மா பயப்படுகின்றேன் என நினைத்துவிட்டார்கள். அனைவரும் ஜோக்காக எடுத்துக்கொண்டார்கள். அதிகமான இனிப்பான உணவுகளையும், புளிப்பான உணவுகளையுமே கேட்டதால் என் கணவரோ நான் ப்ரெட்னட் ஆக இருக்கின்றேன் என நினைத்து அந்த சந்தோசத்தில் என்னை அதிகமாகக் கவனிப்பதுடன் அதற்குறிய சாப்பாடுகளைக் கொண்டு வந்து கொண்டிருந்தார். என்னுடன் ஐந்து சகோதரர்கள். உயிரைக் கொடுக்குமளவுக்குப் பாசம் சகோதரியொருவர் இல்லையென்ற குறையை உணர அவர்கள் வாய்ப்பளிக்கவே இல்லை. என்றாலும் எனக்கென ஒரேயொறு சகோதரியாவது இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே, என் கஷ்டங்களைப் புரிந்து கொண்டிருப்பாளே என நான் அன்று தான் முதலாவதாகக் கவலைப்படுகின்றேன்………

தொடரும்……

✍️உம்மு உபாதா (உஸைமீனிய்யா)
2025/10/29

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *