அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்.
மேலும், அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அன்னாரின் குடும்பத்தினர், அன்னாரைப் பின்பற்றி நடந்த – நடக்க இருக்கின்ற அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக!
“ஷவ்வால் மாத 6 நோன்புகள் பற்றிய 21 பயனுள்ள தகவல்கள் (Click here to download eBook)” எனும் இச்சிறு நூல், கண்ணியத்திற்குரிய அஷ்ஷெய்க் முஹம்மத் ஸாலிஹ் அல்-முனஜ்ஜித் (ஹபிழஹுல்லாஹ்) அவர்களால் தொகுக்கப்பட்ட அரபு மூலத்தினை 2024ஆம் ஆண்டு மொழியாக்கத்திற்காக தயார்படுத்தி இருந்தாலும் அதனை தற்பொழுதுதான் நிறைவு செய்யக்கூடியதாக இருந்தது -அல்ஹத்துலில்லாஹ்-. இதனது அரபுமூல வாசகத்தினை அவர்களின் அதிகாரபூர்வ இணையதளத்தில் (https://goo.gl/K6dFGs) வெளியிட்டிருந்தார்.
அஷ்ஷெய்க் முஹம்மத் ஸாலிஹ் அல்-முனஜ்ஜித் அவர்கள், ஒரு விரிவான தலைப்பை மிகச் சில குறிப்புகளாக அழகாக வழங்கக்கூடியவர். அந்த வகையில், ரமழான் தொடர்பான பல சிறு நூற்களைத் தொகுத்திருந்தார்கள். அவைகளில்:
1. “ரமழானின் இறுதிப் பத்து நாட்கள் மற்றும் லைலதுல் கத்ர் குறித்த 38 பயனுள்ள தகவல்கள்”
2. “ஸகாதுல் ஃபித்ர் குறித்த 50 பயனுள்ள தகவல்கள்”
3. ”பெருநாளின் ஒழுக்கங்கள், சட்டங்கள் குறித்த 55 பயனுள்ள குறிப்புகள்”
ஆகியவைகளை தமிழில் மொழியாக்கத்தின் தொடர்ச்சியாகவே, ஷவ்வால் மாத 6 நோன்புகள் பற்றிய இக்கையேடு தற்போது மொழியாக்கம் செய்யப்படுகின்றது.
மேலும் இதிலே:
• ஷவ்வால் மாத நோன்பின் முக்கியத்துவமும், சிறப்பும் என்ன?
• இதனை நோற்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
• இந்த நோன்பை எந்த அடிப்படையில் நோற்க வேண்டும்?
• ரமழான் மாத கழா நோன்பு இருப்பவர் ஷவ்வால் மாத நோன்பை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும்?
• ரமழான் கழா நோன்பையும், ஷவ்வால் மாத 6 நோன்புகளையும் ஒரே எண்ணத்தில் நோற்கலாமா?
• ஷவ்வால் மாதம் மற்றும் அதன் 6 நோன்புகள் பற்றிய மூடநம்பிக்கைகள் என்ன?
போன்ற பல முக்கிய விடயங்களை 21 குறிப்புகளாக ஆசிரியர் இதில் தொகுத்துள்ளார்.
அத்துடன், இந்நூலில் இடம்பெற்றுள்ள சில விடயங்களை வாசிப்பவர்களின் தெளிவுக்காக சில இடங்களில் மேலதிக விளக்கங்களை அடைப்புக்குறிக்குள் ( ) மற்றும் அடிக்குறிப்புகளாக தந்துள்ளேன் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இந்த ஷவ்வால் மாத 6 நோன்புகளை அழகிய முறையிலும், பூரணமாகவும் நோற்று அதன் மூலம் வருடம் முழுமையாகவும் நோன்பு நோற்று நன்மையைப் பெற்ற அடியார்களாக ஆகுவதுடன், அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித்தந்த வழியில் எமது வாழ்வை அமைத்துக்கொண்டு அதிலே இறுதிவரை நிலைத்திருக்கக்கூடிய பாக்கியத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்பாலிப்பானாக!
இவ்வண்ணம்,
உங்கள் சகோதரன்,
றஸீன் அக்பர் (மதனி)
23-03-2026
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library