அல்லாஹ்வின் மீது விசவாசங்கொள்வது நல்லறங்களில் மிகச் சிறந்தது..
50- செயல்களில் சிறந்தது எது?என நபி(ஸல்)அவர்களிடம் வினவப்பட்டது. அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கைக் கொள்வது என்றார்கள். பின்னர் எது? என வினவப்பட்டது. அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவது என்றார்கள். பின்னர் எது? என்று கேட்கப்பட்டது ஏற்றுக் கொள்ளப்படும் ஹஜ் என்றார்கள்.
புகாரி: 26 அபுஹூரைரா (ரலி)
51- நான் நபி(ஸல்)அவர்களிடம் எந்த நற்செயல் சிறந்தது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் மீது ஈமான் (நம்பிக்கை) கொள்வதும் அவனது பாதையில் ஜிஹாத் செய்வதும் (போராடுவதும்) ஆகும் என்று பதிலளித்தார்கள். நான் எந்த அடிமை(யை விடுதலை செய்வது) சிறந்தது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள்,அவர்களில் அதிக விலை கொண்ட அடிமையும் தன் எஜமானர்களிடம் பெறுமதி மிக்க அடிமையும் (தான் சிறந்தவர்கள்) என்று பதிலளித்தார்கள். நான் என்னால் அது (அடிமை விடுதலை செய்வது) இயலவில்லையென்றால்? என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் பலவீனருக்கு உதவி செய், அல்லது உழைத்துச் சம்பாதிக்க இயலாதவனுக்கு நன்மை செய் என்று கூறினார்கள். நான் இதுவும் என்னால் இயலவில்லையென்றால்..? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், மக்களுக்குத் தீங்கு செய்யாமல் இரு, ஏனெனில் அதுவும் நீ உனக்கு செய்து கொள்ளும் ஒரு தர்மம் ஆகும். என்று கூறினார்கள்.
புகாரி-2518: அபூதர்(ரலி)
52- அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது? என்று நபி(ஸல்)அவர்களிடம் நான் கேட்டபோது, தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும், என்று பதில் கூறினார்கள்.அதற்கு அடுத்து எது? என்றேன். பெற்றோருக்கு நன்மை செய்தல்,என்றார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிதல் என்றனர். எனக்கு இவற்றை நபி(ஸல்) அவர்கள் அறிவித்தனர். (கேள்வியை) மேலும் நான் அதிகப்படுத்தியிருந்தால் நபி(ஸல்)அவர்களும் மேலும் சொல்லியிருப்பார்கள்.
புகாரி-527: அப்துல்லாஹ் பின் மஸ்வூது(ரலி)
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்புச் சகோதரரே! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிக்கட்டும்!! தொடர்ந்து இந்த வலைதளத்தை நடத்துங்கள். முஸ்லிம் என்று சொல்லிக் கொள்பவர்களால் நடத்தப்படும் எத்தனையோ அநாகரிகமான தளங்களை விட தாங்கள் செய்து கொண்டிருக்கும் இந்த வேலை நிச்சயமாக அல்லாஹ்வுக்கு உவப்பானதாக இருக்கக் கூடும்.