1251. ”பயணம் வேதனையில் ஒரு பகுதியாகும். அது ஒருவரின் உணவையும் பானத்தையும் உறக்கத்தையும் தடுத்து விடுகிறது. எனவே, ஒருவர் தம் தேவையை முடித்ததும் விரைந்து தம் குடும்பத்தாரிடம் செல்லட்டும்”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1252. ”நபி (ஸல்) அவர்கள் தங்களின் வீட்டிற்கு இரவு நேரத்தில் வரமாட்டார்கள். காலையிலோ, மாலையிலோ தான் பிரயாணத்திலிருந்து வருவார்கள்.”
1253. நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (தபூக் எனும்) ஒரு போரில் இருந்தோம். (போர் முடிந்து) திரும்பி வந்து நாங்கள் மதீனாவை நெருங்கிக் கொண்டிருந்தோம். பிறகு நாங்கள் (மதீனாவுக்கு) வந்து (ஊருக்குள்) நுழைய முற்பட்டோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், (நீங்கள் வந்து சேர்ந்துவிட்ட தகவல் வீட்டுப் பெண்களை சென்றடைய) இஷா நேரம் வரைப் பொறுத்திருங்கள். தலைவிரி கோலமாயிருக்கும் பெண்கள் தலைவாரிக் கொள்ளட்டும். (கணவனைப் பிரிந்திருந்த)பெண்கள் சவரக்கத்திகளைப் பயன்படுத்தி(த் தங்களை ஆயத்தப்படுத்தி)க் கொள்ளட்டும்” என்றார்கள்.
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library