1402. பர்தா அணிவது சட்டமாக்கப்பட்ட பின்னால், தம் தேவைக்காக வேண்டி (நபி(ஸல்) அவர்களின் துணைவியரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) வெளியே சென்றார்கள். அவர்கள், (உயரமான) கனத்த சரீரமுடைய பெண்மணியாக இருந்தார்கள். அவர்களை அறிந்தவர்களுக்கு அவர்கள் யார் என்று (அடையாளம்) தெரியாமலிருக்காது. அவர்களை அப்போது, உமர் இப்னு கத்தாப் (ரலி) பார்த்துவிட்டு ‘சவ்தாவே, அல்லாஹ்வின் மீதாணையாக, நீங்கள் யார் என்று எங்களுக்குத் தெரியாமலில்லை. நீங்கள் (யார் என்று அடையாளம் தெரிகிற வகையில்) எப்படி வெளியே வந்திருக்கிறீர்கள் பாருங்கள்!” என்று கூறினார்கள். சவ்தா (ரலி) உடனே அங்கிருந்து திரும்பிவிட்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டில் இரவு உணவு அருந்திக்கொண்டிருந்தார்கள். அவர்களின் கரத்தில் எலும்புத் துண்டு ஒன்று இருந்தது. அப்போது சவ்தா (ரலி) வீட்டினுள் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் என் தேவை ஒன்றிற்காக வெளியே சென்றேன். உமர் (ரலி) என்னிடம் இவ்வாறெல்லாம் கூறினார்கள்” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு ‘வஹீ’ (வேத வெளிப்பாடு) அறிவித்தான். பிறகு அந்நிலை அவர்களை விட்டு நீக்கப்பட்டது. எலும்புத் துண்டு அவர்களின் கரத்தில் அப்படியே இருந்தது. அதை அவர்கள் (கீழே) வைத்துவிடவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘நீங்கள் உங்கள் தேவைக்காக வெளியே செல்லலாம் என்று உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்கள்.
புஹாரி : 4795 ஆயிஷா (ரலி).
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library