اِنَّ الَّذِيْنَ يَاكُلُوْنَ اَمْوَالَ الْيَتٰمٰى ظُلْمًا اِنَّمَا يَاْكُلُوْنَ فِىْ بُطُوْنِهِمْ نَارًا وَسَيَـصْلَوْنَ سَعِيْرًا
“நிச்சயமாக எவர்கள் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக உண்ணுகிறார் களோ, அவர்கள் தமது வயிறுகளில் நெருப்பையே உண்கின்றனர். அவர்கள் சுட்டெரிக்கும் நரகத்தில் நுழைவார்கள்.” (4:10)
அநாதைகளின் சொத்துக்களை உண்பவர்கள் தமது வயிற்றில் நெருப்பைத்தான் கொட்டிக் கொள்கின்றனர். மறுமையில் அவர்கள் நரகம் செல்வார்கள் என இந்த வசனம் கண்டிக்கின்றது. “அநாதைகளின் சொத்துக்களை உண்பது” என்ற வார்த்தைதான் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, வேறு தேவைகளுக்கு அவற்றைப் பயன் படுத்திக் கொள்ளலாம் என்று எண்ணி விடக் கூடாது.
மனித வாழ்வில் உணவு அத்தியவசியப் பொருளாகும். அத்தியவசியத்திற்குக் கூட அநாதை களின் சொத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றால் ஆடம்பரத்துக்கும், அடுத்த தேவைகளுக்கும் அதைப் பயன்படுத்தலாம் என்று கூற முடியாதல்லவா?
அநாதையின் சொத்து என்றதும் நாம் வெகு தூரமாகத்தான் சிந்திப்போம். தாய் தந்தை இல்லாத பிள்ளைகளின் சொத்தை அடுத்தவர் அபகரிக்கக் கூடாது என்று கூறப்படுவதாக மட்டுமே எடுத்துக் கொள்கின்றோம். ஆனால், இது இன்று பல குடும்பங் களில் நடந்து கொண்டிருக்கும் அநியாயமாகும்.
ஒரு தந்தை மரணித்து அவருக்கு பல பிள்ளைகள் இருந்து மூத்தவன் இளையவர்களுடைய சொத்தை எடுத்தாலும் அநாதையின் சொத்தை ஆக்கிரமிக்கும் அநியாயம்தான் இது. இந்த நிலை இன்று பல குடும்பங்களில் நிலவி வருகின்றது.
அடுத்து, இஸ்லாம் அநாதைகளை ஆதரிக்கச் சொல்கின்றது, அரவணைக்கச் சொல்கின்றது, அவர்களுக்கு நல்லது செய்யச் சொல்கின்றது. இப்படியிருக்கும் போது அவர்களுக்கு உரியதைக் கொடுக்காமல் பறித்துக் கொள்வது மிகப்பெரும் அநியாயமும் அக்கிரமுமாகும்.
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library